2010 ம் ஆண்டில் எழுதப்பட்டு ஆய்த எழுத்து பத்திரிகையில் வெளிவந்த சிறுகதை.
அந்தத்தனிமை பழகிப்போய்விட்டதுதான். ஆனாலும் இன்று அது அவளுக்கு தேவைப்பட்டது. அவளுடைய வாழ்க்கை, அவளுடைய கதை அந்தத் தேசத்தில் வழமையான ஒன்றுதான். அவளும் அவற்றை ஆயிரம் தடவைகள் அசைபோட்டிருப்பாள். ஆனாலும் இன்று மீண்டும், கட்டாயம் நினைவுபடுத்தவேண்டும் போலிருந்தது. தொண்டை கனக்கும், கண்கள் பனிக்கும், நெஞ்சு பதைபதைக்கும், உயிர் வலிக்கும் ஆனாலும் அவற்றை மீண்டும் ஒருமுறை அனுபவிக்க ஆயத்தமானாள். இரண்டு நாட்கள் இடைவிடாத மழை என்பதால் திறந்திருந்த யன்னலினூடே குளிர்காற்று வந்துகொண்டிருந்தது. ஓவென்று திறந்திருந்த கதவையும் சற்று சாத்திவிட்டாள். தலை சுற்றுவது போலிருந்தது. உடல் தளர்ந்து போயிருந்தது. எல்லாம் அந்த மாத்திரைகள் பார்க்கின்ற வேலைதான். அந்த மண்ணுக்கேயுரிய சோகங்களைப்போல அந்த மாத்திரைகளும் பழகிப்போனவைதான். அடிக்கடி வந்துபோகும் மலேரியாவை குணப்படுத்த அந்த மாத்திரைகளுக்கு அடிக்கடி வேலையிருக்கும். அதன் பெயரை கேட்டால் குழந்தைகூட கூறும் குளோரோகுயின் என்று. அவள் சிறுமியாக இருந்தபோது அம்மா ஒன்றுதான் தருவாள். எப்படித்தான் முயற்சித்தாலும் நாக்கில் அதன் கசப்பு உணராமல் உட்கொள்ளவே முடியாது. அம்மா நிறைய சீனிபோட்டு கரைத்துத்தரும் எலுமிச்சம்பழச்சாற்றுடன்தான் அதை உட்கொள்வாள். அதிலிருந்து சாதாரண நேரங்களில்கூட எலுமிச்சம்பழச்சாற்றில் அந்த மாத்;திரைகளின் மணம் இருப்பதுபோல உணர்வதால் எலுமிச்சம் பழச்சாறு குடிப்பதையே விட்டு விட்டாள். அந்த மாத்திரைகள் சக்திமிக்கவை. உடலை பலவீனமாக்கிவிடும். வயதுகூடக்கூட ஒன்று இரண்டாகியது. ஓன்றுபோட்டாலே தாங்க முடியாது. இப்போது........ மாத்திரைகளை திட்டயவாறே பாயில் போய் சரிந்தாள்.
அந்தத்தனிமை பழகிப்போய்விட்டதுதான். ஆனாலும் இன்று அது அவளுக்கு தேவைப்பட்டது. அவளுடைய வாழ்க்கை, அவளுடைய கதை அந்தத் தேசத்தில் வழமையான ஒன்றுதான். அவளும் அவற்றை ஆயிரம் தடவைகள் அசைபோட்டிருப்பாள். ஆனாலும் இன்று மீண்டும், கட்டாயம் நினைவுபடுத்தவேண்டும் போலிருந்தது. தொண்டை கனக்கும், கண்கள் பனிக்கும், நெஞ்சு பதைபதைக்கும், உயிர் வலிக்கும் ஆனாலும் அவற்றை மீண்டும் ஒருமுறை அனுபவிக்க ஆயத்தமானாள். இரண்டு நாட்கள் இடைவிடாத மழை என்பதால் திறந்திருந்த யன்னலினூடே குளிர்காற்று வந்துகொண்டிருந்தது. ஓவென்று திறந்திருந்த கதவையும் சற்று சாத்திவிட்டாள். தலை சுற்றுவது போலிருந்தது. உடல் தளர்ந்து போயிருந்தது. எல்லாம் அந்த மாத்திரைகள் பார்க்கின்ற வேலைதான். அந்த மண்ணுக்கேயுரிய சோகங்களைப்போல அந்த மாத்திரைகளும் பழகிப்போனவைதான். அடிக்கடி வந்துபோகும் மலேரியாவை குணப்படுத்த அந்த மாத்திரைகளுக்கு அடிக்கடி வேலையிருக்கும். அதன் பெயரை கேட்டால் குழந்தைகூட கூறும் குளோரோகுயின் என்று. அவள் சிறுமியாக இருந்தபோது அம்மா ஒன்றுதான் தருவாள். எப்படித்தான் முயற்சித்தாலும் நாக்கில் அதன் கசப்பு உணராமல் உட்கொள்ளவே முடியாது. அம்மா நிறைய சீனிபோட்டு கரைத்துத்தரும் எலுமிச்சம்பழச்சாற்றுடன்தான் அதை உட்கொள்வாள். அதிலிருந்து சாதாரண நேரங்களில்கூட எலுமிச்சம்பழச்சாற்றில் அந்த மாத்;திரைகளின் மணம் இருப்பதுபோல உணர்வதால் எலுமிச்சம் பழச்சாறு குடிப்பதையே விட்டு விட்டாள். அந்த மாத்திரைகள் சக்திமிக்கவை. உடலை பலவீனமாக்கிவிடும். வயதுகூடக்கூட ஒன்று இரண்டாகியது. ஓன்றுபோட்டாலே தாங்க முடியாது. இப்போது........ மாத்திரைகளை திட்டயவாறே பாயில் போய் சரிந்தாள்.
அவளுடைய வாழ்வில் மகிழ்ச்சி என்பது கனவுபோலாகிவிட்டது, அந்த மண்ணில் வசித்தவர்களின் அநேகமானவர்களைப்போல! சந்தோசம் என்பது அவளது ஆருயிர்க் கணவனுடனும் ஆறுதல் என்பது அவளது அன்பு மகனுடனும் தொலைந்துவிட்டன. சுனாமியில் சிதைந்துபோன அவள் வாழ்க்கை முள்ளிவாய்க்காலில் சின்னாபின்னமாக்கப்பட்டது. முன்னது என்ன நடக்கிறது என்று தெரியுமுன்பே நடந்து முடிந்துபோனது, பின்னது என்ன நடக்கின்றது என்று தெரிந்தும் (என்ன செய்வது என்று தெரியாமலிருக்கையில்) நடத்தி முடிக்கப்பட்டது.
-------------------------
முல்லைத்தீவில் அவளின் ஊரிலிருந்த பாடசாலைபோன்றுதான் ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருந்தாள். தான் படித்த பள்ளியிலேயே பணியாற்றக்கிடைத்தது தன் பாக்கியமென அடிக்கடி கூறுவாள். அவளுக்கு மணம்முடித்துவைத்து கண்மூடமுன்னர் பேரப்பிள்ளைகளை கொஞ்சவேண்டும் என காத்திருந்த அவளது பெற்றோருக்காக காலம் காத்திருக்கவில்லை. எனவே காலனால் காத்திருக்க முடியவில்லை. அன்பான கணவன் இருக்கையில் அம்மா அப்பா, இல்லாத குறை அவளுக்கு தெரியவில்லை. அவனும் சில மைல்கள் தள்ளியுள்ள பள்ளியில் கற்பித்துக்கொண்டிருந்தான். போர்ச்சூழலிலும் அவர்கள் வாழ்வு மகிழ்ச்சியாகத்தான் கழிந்தது. அவர்களின் அன்பின் அடையாளமாய் மகனும் கிடைத்தான்.
சுமுகமாயிருந்த வாழ்வில் சுழன்றடித்தது சுனாமி. கடலிலிருந்து மிக அருகில்தான் வீடு. நினைத்த நேரத்தில் கடற்கரைக்குச் சென்று காலாற நடந்து கதைபேசி காற்றுவாங்க முடியும் என்று அவள் அடிக்கடி நினைத்துக்கொள்வாள். அந்த வரம் சாபமாகிப்போகுமென அவள் மட்டுமல்ல, யாருமே நினைத்திருக்கவில்லை.
ஞாயிற்றுக்கிழமை காலைவேளை மப்பும் மந்தாரமுமாகவே விடிந்தது. அவள்மட்டுமே எழுந்து முற்றம் கூட்டிக்கொண்டிருந்தாள். திடீரென பேரிரைச்சல். அமைதிப்பேச்சுவார்த்தைகள் அல்லாடிக்கொண்டிருந்த நேரம் என்பதால் வான்கழுகுகள் வழமையான வேலைக்காக காலையிலேயே வந்துவிட்டனவா என நினைத்துக்கொண்டாள். ஆனால் இரைச்சல் இன்னும் சத்தமாக, கொடூரமாக நெருங்கிவந்தது. பனையோலை வேலிகளினூடே சில கால்கள் தடதடக்க ஓடுவது தெரிந்தது. "கடல் வருது. எல்லாரும் ஓடுங்கோ!" என்று எங்கிருந்தோ ஒரு இயலாமை கலந்த குரல் கேட்டது. என்ன நடக்கிறது என்று புரியாவிட்டாலும் ஏதோ அசம்பாவிதம் என்பதை புரிந்து கொண்டு வீட்டின் உள்ளே ஓடினாள். "கடல் வருதாம். எழும்புங்கோ!" என்றவாறு கணவனை உலுக்கி எழுப்பி மகனையும் தூக்கி, நகைகள், முக்கிய பத்திரங்களும் இருந்த பையை தூக்கி...... அதற்குள் ஒரு பக்க சுவரை உடைத்து தண்ணீர் புகுந்தது. சுவர்களின் இடையே சுழன்றது கருநிற உப்புநீர். எங்கேயோ எல்லாம் சுழன்று எதையோ எட்டிப்பிடித்தாள். கூரை. கணவனையும் மகனையும் அழைத்தவாறே மேலே ஏறினாள். அங்கே "அம்மா, அப்பா" என்று கதறிக்கொண்டிருந்த அவளின் நான்கு வயது மகன் அவளை கண்டதும் அப்பா என்று கத்தி கீழே தண்ணீரைக் காட்டி கதறினான். கணவனை அழைத்து அவளும் கதறினாள். அவன் வந்தான், பிணமாக.... மிதந்தபடி. பின்னாளில், தன்னை காப்பாற்றி கூரையில் ஏற்றிவிட்டு, அவளை காப்பாற்றத்தான் அவன் மீண்டும் தண்ணீருக்குள் குதித்தான் என்று மகன் சொல்ல அறிந்து துடித்தாள். தண்ணீரில் அவள் கண்ட குமிழிகளில் ஒன்று அவனுடைய உயிர்மூச்சாய் இருந்திருக்கும் என்பதை நினைத்து அவள் அன்றே உயிருடன் இறந்துபோன நடைபிணமாய் வாழ்க்கையை தொடர்ந்தாள் மகனுக்காக.
-------------------------
அவளின் நெஞ்சும் வயிறும் நெருப்பாய் எரிந்தது. வாய் வறண்டது. சுவாசத்திலும் கசத்தன. அந்த மாத்திரைகள், காலையிலிருந்தே ஒரு வாய் சாப்பிடவும் முடியவில்லை. சாப்பிடாமல் இப்போது அந்த மாத்திரைகளை போட்டதுதான் இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணம். மெதுவாக நிமிர்ந்து அருகிலிருந்த தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு மீண்டும் அந்த மாத்திரைகளை மனதுக்குள் நொந்தவாறே சரிந்து படுத்து இமைகளை மூடினாள்.
-------------------------
எல்லாமே முடிந்துபோவதற்கு சில வருசங்களுக்கு முன்னர் பதுங்கு குழிகளே வீடுகளாகியிருந்த நேரம். தெருக்களெல்லாம் சதைக்குவியல்களும் மரண ஒலங்களும் மலிந்துபோயிருந்த பொழுதுகள். அடுத்துவரும் சில நாட்களில் அவை இன்னும் மலியும் என்று அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்திருந்தது. அங்கே ஒரு பதுங்குகுழிக்ளுள் அவளும் மகனும் பரமண்ணன் குடும்பத்தினரும். அங்கிருந்து வெளியேறி வவுனியா செல்லவேண்டுமென ஓரளவுக்கு தெளிவாகியிருந்ததால், நேற்றுதான் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைத்திருந்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தை அவளிடம் கொடுத்து வவுனியாவில் செலவுசெய்யும்படி அவன் சொல்லி புன்னகைத்தான். அங்கே தான் ஐஸ்கிறீம் குடிக்கவேண்டும், மஞ்சள் நிறத்தில் தனது வகுப்புத் தோழன் வைத்திருப்பதுபோல ரீசேட் வாங்கவேண்டும் என்றெல்லாம் நடந்துகொண்டிருக்கும் அவலங்கள், அநியாயங்களும் புரியாமல் கூறிக்கொண்டிருந்தான் அந்தப் பிஞ்சு.
எதிரி எறிகணைக்கு இடைவேளை கொடுத்திருந்தான். அப்போது பசிக்காக வீட்டினுள்ளிருந்த பிஸ்கட் பெட்டியை எடுக்க போனான் அவன். அப்போது ஏறிகணை சத்தம் கேட்கவே, "தம்பி அடிச்சிட்டான். கெதியா வா!" என்று கத்தினாள் அவள். அவன் வெளியே வரவும் எறிகணை வீழ்ந்து வெடித்து புழுதி அள்ளிக்கொட்டவும் சரியாக இருந்தது. "ஐயோ! என்ர பிள்ளை!" என கத்தியபடி அவள் வெளியே ஓடிவந்தாள். அங்கே புழுதி அடங்க அதனூடே தெரிந்தது இன்னோர் சதைக்குவியலும் ஒரு பிஸ்கட் பெட்டியும். மறக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான சாட்சிகளில் ஒன்றாய் அவளின் அன்பு மகனும் மாறிப்போயிருந்தான்.
அதன்பின் பல கொடூரங்கள் தாண்டி, பல்லாயிரக்கணக்கான பிணங்கள் கடந்து, பரமண்ணையும் மனைவியும் அவளை அங்கிருந்து வெளியே கொண்டுவந்து சேர்த்தார்கள். ஒருவாறு முகாமிலிருந்து வெளியே வந்தாள். அவர்கள் அவளுடன் கூடவே இருந்து ஆறுதல் சொன்னார்கள். மீண்டும் முகாமுக்குள் கற்பிக்கும் சர்ந்தப்பம் கிடைத்தும் அவளால் போகமுடியவில்லை. மீண்டும் வேலைக்குப் போனால், எல்லாவற்றையும் மறந்து ஓரளவுக்கு அவற்றிலிருந்து மீளலாம் என பரமண்ணையும் மனைவியும் பலமுறை வற்புறுத்தியும் அவள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் அவள் மறக்கவிரும்பவில்லை. அவர்களும் அதை புரிந்துகொண்டு கூடவே இருந்து தம் மகள் போல் பார்த்துக்கொண்டார்கள். இன்று காலைதான் முதல்தடவையாக அவளை தனியாக விட்டுவிட்டு சென்றார்கள். தம் உறவினர்களை பார்க்க திருகோணமலை சென்ற போது அவர்கள் அவளை தங்களுடன் அழைத்துச் செல்ல பலமுறை அழைத்தும் அவள் மறுத்துவிட்டாள். முடிவில் மறுநாள் மதியம் திரும்பிவிடுவதாக கூறிவிட்டு சென்றார்கள். முன்னரென்றால் அவளை தனியே விட்டிருக்க மாட்டார்கள். இப்போது அவள் கொஞ்சம் வலிகளிலிருந்து மீண்டிருப்பதால்தான் சென்றிருந்தார்கள்.
-------------------------
நினைவுகளிலிருந்து அவள் மீளவும் வயிற்றின் எரிவும் உடலின் வலியும் அதிகரித்திருப்பதை உணரமுடிந்தது. வாயில் அதிகரித்த கசப்பு வயிற்றை குமட்டியது. ஆனால் இம்முறை அவள் மாத்திரைகளை திட்டவில்லை. அவை தமது வேலையைத்தான் செய்கின்றன. அத்துடன் அவளின் மனதின் வலியைவிட அந்த மாத்திரைகள் ஏற்படுத்தும் வலி பெரிதாகத் தெரியவில்லை. உண்மையில் அவள் அவற்றுக்கு நன்றிதான் கூறநினைத்தாள். கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. தூக்கம் வருவதுபோலிருந்தது. தாகத்தில் தொண்டை வேறு வறண்டிருந்தது. அருகில் மங்கலாகத் தெரிந்த தண்ணீர்க் குவளையை எடுக்க முயன்றாள். முடியவில்லை. மீண்டும் திரும்பி நேராகப்படுத்து கண்ணை மூடிக்கொண்டாள். அதுவரைநேரமும் அடிக்கடி இமைகளுக்குள் வந்துபோன கணவனினதும் மகனினதும் உருவங்கள் மெல்ல மெல்ல மறைந்து போயின. ஆழ்ந்த உறக்கம் அவளை அணைத்துக் கொண்டது. நாளை பரமண்ணையும் மனைவியும் வந்துபார்க்கும்போது அவர்களுக்கு ஆரம்பத்தில் ஒன்றுமே புரியாது. புரிந்துகொள்ள முடியாமல் போக அவள் சாட்சியங்கள் அழிக்கவில்லை. சற்று முன்னர்தான் புதிதாக திறக்கப்பட்ட மாத்திரைப்புட்டியின் உள்ளே ஒரு மாத்திரை மட்டும் தனித்திருந்தது. அவள் தன் உயிரின் வலியை நிரந்தரமாகக் களைய தொண்ணூற்றொன்பது மாத்திரைகளை உட்கொண்டாள் என்பதற்கான சாட்சியாக.
ரிஷிஷ்காந்த்