திருக்கோணேஸ்வரம்

திருக்கோணமலை வரலாற்றுத் தடங்கள்

திருகோணமலைச் சமூகத்தின் வரலாற்றுத் தடத்தில் துறைமுகமும், கோணேசர் ஆலயமும் அதிக செல்வாக்குச் செலுத்துகின்றன. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கொட்டியாரக் குடாவிற்கு தென்கிழக்காக அமைந்துள்ள இலங்கைத்துறை எனப்படும் துறைமுகமே அதிகளவில் தமிழகத்துடன் தொடர்பைக் கொண்டிருந்தது.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கொட்டியாரம்,குச்சவெளி ஆகிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பெருங்கற்காலத்துக்குரிய கறுப்பு, சிகப்பு மற்பாண்டத் தொல்பொருட்சிதைவுகள் ஒரு நாகரீகமான ஆதித்திராவிட மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை உறுதிசெய்கின்றன. மேற்படி அகழ்வுச் சிதைவுகளும், தமிழ்நாட்டு அரிக்க மேட்டில் கிடைக்கப்பெற்ற பெருங்கற்காலச் சிதைவுகளும் ஒத்த தன்மை உடையனவாகக் காணப்படுகின்றன. இந்தச் சிதைவுகள் கி.மு 1000க்கும் கி.மு 250க்கும் இடைப்பட்டதாகக் கருதப்படும் பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரியதாகக் கணிக்கப்படுவதால், திருகோணமலை மாவட்டத்தில் இக்கால கட்டத்தில் நவநாகரீகமாக மக்கள் வாழ்ந்ததை உறுதி செய்ய முடிகின்றது.

கோணேஸ்வரத்தின் மான்மீயத்தை வட, தென் மொழி நூற்கள் போதிக்கின்றன. பெரியவளமைப்பத்தி, கைலாசபுராணம், கோணேசர் கல்வெட்டு, குளக்கோட்டன் கம்பசாத்திரம், திருக்கோணாச்சல பராணம், கைலாயமாலை, வையா பாடல், திருக்கோணாச்சல வைபவம், கோணமலை அந்தாதி, திருக்கரைசைப் புராணம், கதிரமரைப்பள்ளு என்பன திருகோணமலை வரலாற்றைக் கூறும் தொல் தமிழ் இலக்கியங்களாகும்.

மேலும், திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட சாசனங்களில் சோழர் காலச் சாசனங்களே அதிகமாகும். அதாவது கந்தளாய்க் கல்வெட்டு, பாலமோட்டைக் கல்வெட்டு, பிரடறிக் கோட்டைக் கல்வெட்டு, நிலாவெளிப் பிள்ளையார் கல்வெட்டு , மானாங்கேணிக் கல்வெட்டு, காளி கோவிற் கல்வெட்டு என்பன சிலவாகும்.

திருக்கோணேஸ்வரமும் தோற்றக்காலமும்

திருக்கோணேஸ்வரத்தை வட. தென் தொழித் தொல் இலக்கியங்களும், புராணங்களும் போற்றிப் பாடியுள்ளன. திருக்கோணேஸ்வரம் குறித்து பல ஐதீகக் கதைகளும் உள்ளன. தட்சணகைலாயம், மச்சகேஸ்வரம் என்பன திருக்கோணேஸ்வரத்துக்கான மறுபெயர்களாகும். இந்தப் பெயர்கள் ஏற்பட புராணங்கள் கூறும் நிகழ்வுகள் இந்து மதச் சார்பானவை. ஆதிசேடனும் வாயுபகவானும் தங்கள் வலிமையைக் காட்ட முயன்று, ஆதிசேடன் மகாமேருவின் சிகரத்தை மூடிக் கொள்ள வாயுபகவான் மகாமேருவின் சிகரங்களில் ஒன்றை பெயர்த்து கடலில் வீச, அது இலங்கையின் கிழக்குக் கரையோரமாக விழுந்து திருகோணமலையாக உருவாகியது என்பது புராணத்தில் இருந்து கிடைக்கும் செய்தியாகும்.

இமயமலையின் ஒரு பகுதியே கோணப் பர்வதம் என்ற நம்பிககை காரணமாகக் கோணேஸ்வரத்திற்கு தட்சணகைலாயம் என்ற பெயர் உருவாகியது. திருமால் மச்சவதாரத்தில் தட்சணகைலாயத்தை அடைந்து தனது மீன் உருவத்தை விட்டு நீங்கி மகேஸ்வரனை வணங்கியதால் மச்சகேஸ்வரம் என்ற பெயரும் உருவாகியதாக தட்சணகைலாய புராணம் கூறுகின்றது. புராண இதிகாசங்களில் இருந்து பல மறுபெயர்கள் அறிந்து கொண்ட போதிலும் திருக்கோணேஸ்வரம் என்ற பெயரே நீண்ட கால வழக்கில் உள்ள தலப் பெயராகும். 7ஆம் நூற்றாண்டுக்குரியவர்களாகக் கருதப்படும் திருஞானசம்மந்தர் திருகோணமலை என்ற பதிகத்திலே குறிப்பிட்டுள்ளார். ஆனால் நிலாவெளிப் பிள்ளையார் கல்வெட்டில் திருக்கோணேஸ்வரத்தை மச்சகேஸ்வரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோகர்ணத்து சிவாலயமானது 10ஆம், 11ஆம் நூற்றாண்டுகளில் மச்சகேஸ்வரம் என அழைக்கப்பட்டிருக்கின்றது.

வட இந்தியாவில் கி.பி 5ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வாயு புராணத்தில் திருக்கோணேஸ்வரம் குறித்து சொல்லப்படுவதன் மூலம் இலங்கைத் தீவுக்கு வெளியையும் அதன் புகழ் பரவியிருந்ததை அறிய முடிகின்றது.

குளக்கோட்ட மன்னன்

குளக்கோட்ட மன்னன் வரலாற்றுப்புகழ் பெறக் காரணம் என்னவென ஆராய்வோமானால், கோணேசர் ஆலயத் திருப்பணிகளும், கந்தளாக் குளமுமே அடிப்படைக் காரணங்களாகும். இந்த இரண்டு காரணிகளும் நீங்கலாக வன்னியாட்சி ஏற்படுவதற்கும்குளக்கோட்டனே காரணமாக இருந்தான்.

குளக்கோட்டனைப் பற்றி குறிப்புத் தரும் நூற்களில் கைலாச புராணமே காலத்தால் முந்தியது ஆகும். மேலும் கோணேசர் கல்வெட்டு, திருக்கோணாச்சல வைபவம், திருக்கரைசைப் புராணம், கோணமாமலை அந்தாதி, யாழ்ப்பாண வைபவ மாலை, யாழ்ப்பாணச் சரித்திரம் என்பனவும் குளக்கோட்டனைப் பற்றிய குறிப்புக்களைக் கூறுகின்றது. இவை தவிர குளக்கோட்டன் குறித்த பிரடறிக் கோட்டை சாசனம் குளக்ககோட்டன் பற்றிய முக்கிய தகவலைத் தருக்கின்றது.

குளக்கோட்டன் பற்றி கைலாச புராணம் கூறும் கதை:

கைலாச புராணம் தென் கைலாயத்தின் தல புராணம் என்கின்ற வகையில் தனிச்சிறப்பு வாய்ந்தது. திருக்கோணேஸ்வரத்தில் குளக்கோட்டனும், கயபாகு மன்னனும் ஆற்றிய தொண்டுகளைக் கூறும் நூல்களிலே மிகத் தொன்மையானது ஆகும்.

மனுநீதிகண்டசோழன் மச்சேந்திரபுராணத்தில் கூறப்படும் கோணேசர் ஆலயத்தின் பெருமை அறிந்து தன் சுற்றஞ் சூழ அமைச்சர்களோடு திருக் கோணேஸ்வரத்துக்கு வந்து சேர்ந்தான். பூசைகளையும், விழாக்களையும் நடாத்திய மன்னன் தான் னொண்டு வந்த பொற் குவியலை திருக்கோணேஸ்வரத்தின் ஒரு கிணறு தோண்டி அதில் பாதுகாப்பாக வைத்ததான். அத்துடன் இப்பொற்குவியல்கோணேசருக்கே உரியது என்று ஆணையிட்டு நாடு திரும்பினான். அங்கே தன் ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகியதோடு தன் மகனை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தி விட்டு சிவகதி அடைந்தான்.

ஒரு அந்தணன் மன்னன் மறைந்த நாள் நினைவாகத் திருத்தல யாத்திரை செய்ய திருக்கோணேஸ்வரம் வந்த பொழுது பொற்குவியல் புதைக்கபட்டு இருந்த கிணற்றுக்கு அருகில் தூஙடகினான். அங்கே தோன்றிய பூதம் மனுநீதி கண்ட சோழன் இலங்கைக்கு வந்து கோணேசர் ஆலயப் பணி செய்த செய்தியைக் கூறியதோடு பொற்குவியல் புதைக்கப்பட்ட செய்தியையும் கூறியதுடன் இந்தகவல் அனைத்தையும் சோழனின் பெருமை மிகு மன்னான குளக்கோட்டனிடம் கூறும் படியும் கூறியது. குளக்கோட்டன் அந்தணர் மூலம் பூதம் கூறிய செய்தியை அறிந்து திருக்கோணேஸவரத்தை அடைந்தான்.

குளக்கோட்ட மன்னன் கிணற்றருகில் அடைந்ததும், மீண்டும் தோண்றிய பூதம் மனுநீதிகண்ட சோழன் அடையாளமாக எழுதி வைத்திருந்ததாகக் கூறி ஒரு செப்பேட்டையும் கொடுத்தது. குளக்கோட்ட மன்னன் கிணற்றில் இருந்து பெற்றுக் கொண்ட பொற்குவியல் மூலம் கோணேசர் ஆலயத்தில் மகா மண்டபம், முன் மண்டபம், உயர்ந்த கோபுரங்கள், திருமால் கோட்டம், அன்ன சத்திரம், ஓதுவார் மடம்,ஆகியவற்றை அமைத்தான். அத்துடன் உமைக்கு ஒரு தனிஆலயத்தையும், சுற்று மதிலையும்,உருவாக்கினான். புலன் வழியால் உருவாக்கிய பாவங்களை நீக்கி இறையருள் பெறப் பாவநாச தடாகத்தை உருவாக்கி சிவன் நீராடுவதற்கு ஒரு தனியான மண்டபத்தையும் அமைத்தான். கோணேசர் ஆலயத்தைததரிசிக்கும்முனிவர்கள், துறவிகள், பிராமணர்கள், அடியார்கள் தங்குவதற்கு பெரும் மண்டபங்களும் மாளிகைகளும் உருவாக்கினான். மேலும் குளக்கோட்டன் திருகோணமலை நகரை மலரும், கனிகளும் தரும் மரங்களால் சோலையாக்கினான். இதையே “விளங்கும் இளங் காவனம் சூழ்ந்து வெய்யிலின் கிரணம் படாத புவி” என வர்ணிக்கிறது கைலாச புராணம்.

குளக்கோட்ட மன்னன் தம்பலகம ஆதிகோணநாயகர் கோவிலுக்கு ஆற்றிய தொண்டுகள் பற்றி செவிவழிக்கதைகள், திரிகோணாசல புராணம், தட்சணகைலாயம், கோணேசர் கல்வெட்டு, ஆகியன மூலம் அறிகின்றோம்.

மூலம்: சரவணபவன்.க., (2003),"வரலாற்றுத் திருகோணமலை", திருகோணமலை வெளியீட்டாளர்.

- நன்றி பொதிகை -