காணவில்லை என்னை...!

- ரிஷிஷ்காந்த் -

பூவே உன் புன்னகையால் என்
உள்ளம் தத்தித் தாவாதோ...
தீவே உன் திக்குகள் எங்கும்
தித்திக்கின்ற தேனோ!
பார்வை என்மேல் பட்டு பட்டுப்
பட்டாம்பூச்சி ஆவேனோ...
தீர்வை தொட எட்டித்தோற்கும்
பேச்சுவார்த்தை தான் நானோ!

கண்களா கனரக வெப்
பன்களா தாக்கினாய்
ஓடினேன் தினமே!
மாட்டினேன் காதலின்
சிறையிலே பூட்டினாய்
வாடினேன் மனமே!

(பூவே உன் புன்னகையால்...)

முத்தமிழே உன்னை கண்டது - என்
முப்பொழுதின் தவமென்பேன்.
முன்தினம் உன் காதல் வந்தது
வரமென்பேன்.

என் இதயச்சுவரில் எங்கும்
உன் பெயரை எழுதிக்கொண்டேன்.
என்னுயிரே நீதான் எந்தன்
நினைவென்றேன்.

நீ ஒருத்தி
ஓடும் நீரை நிறுத்தி
தீ கொளுத்தி
உயிர் கொன்றாய்!
உள்ளம் வென்றாய்!
அடி காதல் பேயாய்
வாழ்வை தின்றாய்!

(பூவே உன் புன்னகையால்...)

வள்ளுவனின் வாய்மொழி நீதான்.
வண்ணமலர் வாசமும் நீதான்.
வான்மழையின் ஓசையும்
எந்தன் ஆசையும் நீதான்.

அம்புலியின் அழகும் நீதான்.
ஆண்டவனின் அறிவும் நீதான்.
அந்திவான நிறமும்
எந்தன் நினைவும் நீதான்.

நீர் நீதான்.
அடி நீ தீதான்.
வா அழகே!
நீ நானாய்
நான் நீயாய்
அடி வாழ்வோம் வாழ்வோம்
வா வா அன்பே!

(பூவே உன் புன்னகையால்...)

கடவுளாய் மாற்றினாள்
என்னையும் ஒருத்தி...
காணவில்லை என்னை!
காதலால் கண்களை
காற்றிலே அனுப்பி...
தேடுகின்றேன் பெண்ணை!

எப்போதும் என்னுடனே.....

வீட்டின் தெருமுனையில்
விட்டுப்பிரியும் போது
உன்னை எடுத்துக்கொண்டு
முத்தமொன்றை தந்துசென்றாய்.
நானும்.....
உன்னை அனுப்பிவிட்டு
உன்.....
வாசனையை கொண்டுவந்தேன்!

வித்தியாசம்

நீ நினைத்தபடி நான் இல்லையென
நீங்கிச்சென்றாய் - இன்னும்
உன்னை நினைத்தபடி நான்.