வலிகளை பலமாக்கு!

நாளை விடியல் வரும்.
நம்பு இருள் விலகும் .
வானம் உனது வசம்
வந்திடும் வா தமிழா!

துயரம் தொடர்வதில்லை. - உன்
உயரம் தொலைவிலில்லை.
உறுதி இறுதியிலே
வென்றிடும் வா தமிழா!

மொழி இழந்தால்
அழிவு வரும்.
அறிந்துவிடு
அது புது
விடிவு தரும்.

பிரிந்திருந்தால்
வலி பெருகும்.
இணைந்துவிடு
இனம் அது
வலிமை பெறும் .

ஊரூராய் ஓடிஓடி
வாழும் வாழ்க்கை
இருநாள் ஒழியும்.
உனதாசை மண்ணிலே
மகிழ்ச்சி மழை பொழியும்.

நீரில்லா நதியும் கூட
நீரின் ஈரம் உணரும்.
நீ கொண்ட
சோகம் எல்லாம்
மேகம் போல கலையும் .

கனவுகள் அழிவதில்லை.
நனவாகும் காலம் நீளலாம்.

உண்மைகள் மறைவதில்லை.
சிலகாலம் உன்னுள் உறையலாம்.

வரலாறு வழிகாட்டும்.
வலியெல்லாம் பலமாக்கி
ஒன்றாய் நீ
நின்றாலே!

உருளும் உலகு
உனது உயரம் பார்த்து
மருளும் பொழுது
மலரும் நேரம் வரும்.

துயரம் எல்லாம்
துயரம் இல்லை.
அது நீ
உயரம் தாண்டும்
படியென உணர்ந்துவிடு.
உண்மை தமிழை
உதிரத்தில் உலவவிடு

ஒன்றென நின்றது - பல
கண்டங்கள் வென்றது - பின்
கண்டது நொந்தது - தாண்டி
வந்தது மொத்தமும்
நெஞ்சிலே கொண்டிடு.

உந்தன் பெருமைகள் நீ
உணர்ந்துகொண்டால்...
தமிழின் உயர்வினை
உலகறிந்தால்...
அடம்பன் கொடியென
அணி திரண்டால்...
இனத்தின் இருப்பு உன்
இதயத்தில் இருந்தால்...

நாளை விடியல் வரும்.
நம்பு இருள் விலகும் .
துயரம் தொடர்வதில்லை.
உயரம் தொலைவிலில்லை.