தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றிய சுவாமி விபுலானந்தர்!

வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.

ஈழத்தின் கிழக்குக்கோடியில் காரைதீவு என்ற சிற்றூரிலே 1892 ஆம் ஆண்டு பிறந்த மயில்வாகனம், தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பொதுவான தமிழறிஞர் விபுலாநந்தராக மாறியமைக்கு அவரது பன்முகப்படுத்தப்பட்ட பணிகள் மட்டுமன்றி அவரது மனுக்குல நேசிப்பும் காரணமாகும். அவர் பல்துறை சார்ந்த பேரறிஞர். ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப்பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக, விளங்கிய விபுலானந்தர், சமூகத்துறவியாக வாழ்ந்து செய்த தொண்டுகளும், தமிழிற்காற்றிய செவைகளும் அவர் புகழை நிலைக்கச்செய்கின்றன.

மட்டக்களப்பு சென்ற் மைக்கேல் உயர்தர ஆங்கில பள்ளியில் படித்தபோது, தனது கணித நுட்பத்தினால் ஆசிரியரையே வியப்படையச்செய்தார் மயில்வாகனம். தனது 16 வது வயதில் கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சையில் முதலாவது வரிசையில் தேர்ச்சி பெற்று, 1911 ஆம் ஆண்டு கொழும்பு சென்று ஆங்கில ஆசிரியர் பயிற்சிக்கழகத்திற் சேர்ந்து ஆசிரியப்பட்டம் பெற்றார். பயிற்சிக்கழகத்தில் இருக்கும் காலையில் உயர்தர தமிழாராய்ச்சியிலும் கருத்துச் செலுத்திய இவர், கொழும்பில் தமிழறிஞர்களிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்றார். 1916ஆம் ஆண்டு மதுரை தமிழ்ச்சங்க பரீட்சையில் தேர்ச்சி பெற்றார். 1931ஆம் ஆண்டில் தமிழ் நாடு சென்று, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப்பேராசிரியராக மூன்றாண்டுகள் கடமையாற்றினார். பின்னர் ஈழம் திரும்பி, இலங்கை பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப்பேராசிரியராக கடமையேற்றார்.

விபுலாநந்த அடிகளாரின் சமூகப்பணிகள் அளப்பரியவை. அவர் மக்களைத் துறந்து, மக்களை விட்டு விலகி துறவறம் பூணவில்லை. மக்களிடையே துறவியாக வாழ்ந்து சமூகத்தின் துயரங்களிலும், மகிழ்ச்சிகளிலும் பங்கேற்றார். யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகளின் பழக்கம், துறவுள்ளம் படைத்த மயில்வாகனத்தை விபுலானந்த அடிகளாக்கியது. 1922 இல் சென்னை சிறீ இராமகிருஷ்ண மடத்தைச்சார்ந்து, தீட்சா நாமம் பெற்றதுடன், அங்கு இராமகிருஷ்ண விஜயம் என்ற தமிழ்ச்சஞ்சிகைக்கும், வேதாந்த கேசரி என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராக இருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். அத்தோடு செந்தமிழ் என்னும் பத்திரிகைக்கும் கட்டுரைகள் எழுதி வெளியிட்டார்.

அதன் பின் மீண்டும் ஈழம் திரும்பிய சுவாமி விபுலானந்தர், அந்நியர் ஆதிக்கத்தில், மதம், மொழி, கலாசாரம் ஆகிய தனித்துவ இயல்புகளை இழந்து கொண்டிருந்த தமிழினத்தை தட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டார். கல்வி நிறுவனங்கள் பலவற்றை நிறுவினார். மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம், திருகோணமலை இந்துக்கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் ஆங்கிலக்கல்லூரி, காரைதீவு சாரதா வித்தியாலயம் என்பன அவரால் நிறுவப்பட்ட பாடசாலைகளாகும். கொழும்பில் தமிழ்ப்பள்ளிக்கூடம் இல்லாத குறையை நீக்க, விவேகானந்த வித்தியாலயத்தை ஆரம்பித்தார்

நாம் மனிதர் என்னும் பெயருக்கு முழுதும் தகுதி பெற வேண்டுமானால், இன்று முதலே சன்மார்க்கத்தை கடைப்பிடிக்க தொடங்க வேண்டும். பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன், தான் நல்ல நிலையை அடைய விரும்புவதே உண்மையான சன்மார்க்கமாகும் என்பது சுவாமி விபுலானந்தரின் வார்த்தைகள்.

ஈழம் ஈன்றெடுத்த அறிஞர்களில் விபுலாநந்தர் முற்றிலும் வேறுபட்டவர். சாதி, மத, மொழி, இன ஏற்றத்தாழ்வுகளுக்கும், ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர். வறுமையிலும், சாதியப் பாதிப்பாலும் நலிவுற்ற மக்களிடையே உலாவினார். அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.

தாய்மொழிக்கல்விக்கும் அறிவியற்கல்விக்கும் வித்திட்டவர்களில் விபுலாநந்தர் முக்கியமானவர். ஆங்கிலமொழிக்கல்வி ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தில், தமிழ்ப்பேராசிரியராக விளங்கி, அறிவியற்கல்வியை தமிழிலும் போதிக்கவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். தமிழில், அறிவியற் கலைச்சொல்லாக்க துறையில் ஈடுபாடு கொண்டு உழைத்தார்.

தன்னுடைய இலக்கியங்களின் ஊடாக, பல வ அழகை தத்துவங்களையும் விதைத்தார். வாழ்வில் இன்பமும் துன்பமும் வருவது சகசம். இந்த உண்மையை நங்கு அறியாதோரே இன்பம் வந்தபோது துள்ளிக் குதிப்பர். துன்பம் நேர்ந்தபோது சோர்ந்து அழுவர். இன்ப துன்பங்களாகிய சுழல் காற்றில் மானிடர் அலைகின்றனர். இந்த உண்மையை உணராதோர்க்கு இன்பமும் துன்பமும் மயக்கத்தையே செய்யும் என்பது அவரின் தத்துவங்களில் ஒன்று. விபுலானந்தரின் இலக்கியப் பணி குறித்துப் பேசும் போது, தமிழுக்குப் புதிதாகவும் மகுடமாகவும் அமைவது யாழ் நூலாகும். பழந்தமிழரின் இசை நுட்பங்களை ஆராய்ச்சி முறையாக விபரிக்கும் ஒரு முதல் நூல். பண்டைத் தமிழரின் இசைக்கருவிகளாகிய வில் யாழ், பேரி யாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ், சகோட யாழ், என்பன பற்றி யாழ் நூல் கூறுகின்றது. விபுலாநத்தாரின் 14 ஆண்டுகள் ஆராய்ச்சியின் பயனாக யாழ் நூல் தமிழுக்கு பொக்கிஷமாகும்.

ஊர் கொத்துரொட்டி


உணவுகளின் சுவைகள் ஊருக்கு ஊர் மாறுபட்டிருப்பதை கவனித்திருப்பீர்கள். சில ஊர்களை குறிப்பிடட உணவுக்கு பிரபலமாக இருக்கும். அப்படிப்படட நிறைய ஊர்களும் நிறைய உணவுகளையும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். அதே போல சில உணவுகள் சில ஊர்களில் தனித்துவமான சுவையுடன் இருக்கும். அப்படிப்படட ஒன்றுதான் இந்த யாழ்ப்பாண கொத்துரொட்டி.

எமது தாயகப்பகுதிகளையும், மக்களையும் பொறுத்தவரையில் கொத்துரொட்டி பிரபலாமா உணவுதான். விதம்விதமான சுவைகளில், விதம்விதமான முறைகளில் இது தயாரிக்கப்படுகிறது. பரலினால் செய்யப்படட அடுப்பில் கல்லை வைத்து ஊர் எல்லைவரை சத்தம் கேட்க கொத்தப்படும் கொத்துரொட்டி மெல்ல மெல்ல வழக்கொழிந்து வருகிறது. கண்ணாடிக்கடைகளில் சத்தமின்றி மெல்ல வறுத்து எடுக்கப்படும் ஒரு சாதாரண உணவாக அது மாற்றப்பட்டு வருகிறது.

சில இடங்களில் கொத்துரொட்டி வேறுவேறு சுவைகளில் தயாரிக்கப்படும். குறிப்பாக திருகோணமலை, மடடக்களப்பு, அம்பாறை போன்ற கிழக்கு மாகாணங்களில் பல்வேறு சுவையுடைய கொத்துரொட்டிகள் தயாரிக்கப்படடன. அந்த சுவைகளும் நன்றாக இருக்கும். இப்போதெல்லாம் அந்த கொத்து பல்வகைமை வெகுவாக குறைந்துவிட்ட்து. திருகோணமலை சரஸ்வதி தியேட்ட்ருக்கு அருகிலுந்த ஒரு கடையில் சாப்பிடட ஒரு கொத்துரொட்டியின் சுவையில் வேறு எங்கேயும் இதுவரையில் நான் கொத்துரொட்டி சாப்பிடததில்லை. பின்னர் ஒருதடவை தேடிச்சென்ற போது அந்த கடையும் கொத்தும் முன்னாள் விடயங்களாகி போயிருந்தமை தெரியவந்தது.

முன்னர் யாழ்ப்பாணத்தில் கொத்துரொட்டி பெரும்பாலும் ஒரே மாதிரியான சுவை, ஒரே மாதிரியான மணத்துடன்தான் இருக்கும். ஆனால் அந்த சுவைக்கும் மனத்துக்கும் ஈடு இணையே இல்லை. சிறுவயதில் அப்பா வாசலில் வரும்போதே கொத்து ரொட்டி வருகிறது என்பதை இலகுவாக மோப்பம் பிடித்துவிடுவோம். கூடுதலாக நல்ல உறைப்புடன் இருக்கும். அந்த பார்சலை பிரிக்க பிரிக்க நாக்கின் சுவை நரம்புகள் எல்லாம் ஜித்து ஜில்லாடி பாட்டு போட்டு ஆடத்தொடங்கும்.

இப்போது நிலைமை வேறாகி விட்ட்து. ஒரு இடத்துக்கு போய், நல்ல கொத்துக்கடை எங்கே இருக்கிறது என்று கேடடால், அவர்கள் காட்டும் வழி எல்லாம் ஏதாவது ஒரு உயிர்ப்பற்ற, கண்ணாடி சுவரிடப்படட கடையில் போய் நிற்கிறது. அங்கே ஸ்மார்ட் போனை பார்த்து பல்லிளித்து கொண்டிருக்கும் ஒருவர் எங்களை கண்டவுடன் முகத்தை கடுகாடு என்று மாற்றி, குறுகுறு என்று பார்க்கிறார். நாமாக என்ன வேணும் என்று கிடக்கிறார் என்பதை புரிந்து கொண்டோ கொத்து தாங்க அண்ணா எண்டு சொன்னால், பில் எழுதிவிட்டு, கடை போனை எடுத்து போனில் எங்கேயோ சொல்கிறார்.( ஹை டெக் கடை வைச்சிருக்காங்களாம்!)

சாதாரண நேரத்தை விட அதிகமான காத்திருப்பின் பின்னர், எந்தவித சத்தம் சந்ததியும் இன்றி, எங்கோ உள்ளேயிருந்து வறுத்த கொத்து ரொட்டி, வெள்ளைநிற பெட்டிகளில் வந்து சேருகிறது. அது வந்து சேரும் போது, ஓடர் அடுத்தவரின் முகம் போலவே எங்கள் முகமும் மாறியிருக்கும். இதெல்லாம் விட காமெடி அந்த கொத்துரொட்டியை சாப்பிட தொடங்கும்போது நடக்கும். ப்ப்ப்பா....!

மக்களின் மகிழ்ச்சியான தருணங்களை சுவைகூட்டிய கொத்துரொட்டி இப்போது சுவைக்கேட்டு மணம் கெட்டு ஏதோ ஒரு பதார்த்தமாக மாறியவிட்டிருக்கிறது. அவசரகதியில் திரியும் மக்களுக்கோ ஏதோ கொத்து ரொட்டி என்று ஒன்றை சப்பிடடாள் போதும் என்று தோன்றுகிறதோ என்னவோ, இந்த பதார்த்தத்தையும் வாங்கித்தள்ளுகிறார்கள். எதை தந்தாலும் சாப்பிடும் இந்த மனநிலை, அதை விற்றாவது காசு பார்க்க நினைக்கும் சில நவநாகரிக உணவு வியாபாரிகளின் கல்லாவை தாராளமாக நிறைக்கிறது. அவர்கள் அடுத்த கண்ணாடிக்கடையையும் திறந்து, உயிர்ப்பற்ற வாழ்க்கைமுறையை வர்றத்து விடுவார்கள். கடைசியில் காணாமல் போனது யாழ்ப்பாணத்தின் தனித்துவ சுவை, மணம், நிறம் கொண்ட கொத்து ரொட்டி தான்.

- இல.கோகர்ணன் - 

பயநிலை தவிர்த்து எழுவாய்!

டாக்டர் ஆர். கார்த்திகேயன்

நல்ல விஷயங்களை கேட்டால் படித்தால் கொஞ்ச நேரம்தான் அந்த பாதிப்பு இருக்கிறது. ஒருநாள் நாளையில் இருந்து முழுதாக மாறவேண்டும் என்று தோன்றும். ஆனால் சில நாட்களிலேயே எல்லாம் மறந்துபோய் பழைய நிலைக்கு வந்துவிடுகிறோம். ஏன் இப்படி?

ஒரு கெட்ட செய்தி பதிவதைப்போல நல்ல செய்தி நம்மில் பதிவதில்லையே. இது ஏன்?

மனிதன் பகுத்தறிவு, பேசும் திறன், கற்பனைத்திறன் எல்லாம் இருந்தும் அடிப்படையில் ஒரு மிருகம். எத்தனை நவீன திறன்கள் வந்தாலும் மனிதனின் ஆதார குணங்கள் விலங்கினுடையது. அதனால் பல லட்சம் ஆண்டுகளாக நம் மூளையில் உறைந்து கிடக்கும் சில விடயங்கள் நம்முள் பலமாக பதிந்துள்ளன.

நம் ஆதார உணர்ச்சிகள் பெரும்பாலும் எதிர்மறையானவையே. மிருகத்தின் ஆதி உணர்வு பயம். உணவுக்கு போராடுவது முதல் உயிருக்கு போராடுவது வரை அனைத்திலும் முன்னே நிற்பது பயம்தான். பயத்தின் நெருங்கிய உணர்வு கோபம். அதனால்தான் இவ்வளவு நாகரிகம் வளர்ந்தும் பயமும் கோபமும் நம்முடனேயே தொற்றிக்கொண்டுள்ளன.

இதனால்தான் கேட்ட செய்தியை சந்தேகப்படாமல் நம்புகிறோம். நல்ல செய்தி என்றால் சந்தேகமாக பல கேள்விகள் கேட்கிறோம்.

சாதாரண உணவு தரும் போஷாக்கு உங்கள் குழந்தைகளுக்கு போதாது என விளம்பர டாக்டர்கள் சொன்னால் பதறியவாறு அம்மாக்கள் அந்த டப்பாவை வாங்குவார்கள்.

நல்ல வீட்டுச்சாப்பாடு போதும். எந்த டப்பாவும் வேண்டாம் என்று சொல்லிப்பாருங்கள். நூறு சந்தேகங்கள் கேட்டுவிட்டு..........

பின்னரும் டப்பா வாங்குவார்கள்.

பயம் மிகப்பெரிய கிரியா ஊக்கி. அந்த சக்தியை உணர்ந்துதான் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மேலதிகாரிகள், விளம்பரதாரர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் தங்கள் காரியங்களை எளிதாக சாதித்துக் கொள்கிறார்கள்.

பயம் பகுப்பாயும் திறனை மழுங்கடித்துவிடும். கட்டடத்தில் வெடிகுண்டு என தொலைபேசி வந்தால் எனக்கு சாட்சி காண்பித்தால்தான் நான் வெளியே வருவேன் என யாராவது லாஜிக் பேசுவார்களா?

அதுபோலதான் கோபமும். எவ்வளவு நாசூக்கான மனிதராக இருந்தாலும் அவர் காலில் யாராவது ஓங்கி மிதித்துவிட்டால் முதலில் வரும் வார்த்தைகள் கண்டிப்பாக நல்ல வார்த்தைகளாக இருக்காது.

கோபமும் சிந்திக்கும் அறிவை முடக்கிவிடும். மனைவியிடம் கோபத்தில் ஒரு தவறான வார்த்தையை சொல்லிவிட்டு "நான் அப்படி நினைச்சு சொல்லலை." என பின்னர் கணவன்மார்கள் கதறுவதெல்லாம் இதனால்தான்!

பத்து எதிர்மறை உணர்ச்சிகளுக்கு ஒரு நேர்மறை உணர்ச்சிதான் உள்ளது என நரம்பு உளவியல் சொல்கிறது. நீங்களே உங்களுக்கு தெரிந்த எந்த மொழியில் வேண்டுமானாலும் சோதித்து பாருங்களேன். எதிர்மறை உணர்ச்சி என்றால் அச்சம், கோபம், பொறாமை, எரிச்சல், குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை, பதட்டம், விரக்தி என அடுக்கிக்கொண்டே போகலாம். நேர்மறை உணர்ச்சி என்றால் மகிழ்ச்சி, ஆச்சர்யம் என இரண்டு மூன்றுக்கு மேல் இல்லை.

இதனால்தான் நமக்கு அரைமணி நேரத்துக்கு ஒருதடவை பகீர்... பகீர்... என தலைப்புச்செய்திகள் தேவைப்படுகின்றன. சினிமாவில் குற்றங்கள் பிடிக்கின்றன. அமெரிக்க சினிமாக்கள் இல்லாத பூதங்களை எல்லாம் வைத்து படங்களாய் எடுப்பதும் இதனால்தான்.

செய்தித்தாளின் முதல்பக்கத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது ஒரு தன்னம்பிக்கை தரும் செய்தியோ என்றும் வராததும் இதனால்தான். நாம் ஒரு கலவர நிலையை எதிர்பார்த்தே வாழும் சமூகக்கூட்டமாக மாறிவருகிறோம்.

இதனால்தான் ஊக்கமது கைவிடேல் என்ற ஔவை மொழி நமக்கு முக்கியமாக தேவைப்படுகிறது.

வெளியிலிருந்து கிடைக்கும் எல்லா எதிர்மறை எண்ணங்களையும் உணர்வுகளையும் சந்தித்து வெற்றிகொள்ள உள்ளே நேர்மறை எண்ணங்களும் உணர்வுகளும் ஊற்றெடுக்க வேண்டும்.

"உனக்கு படிப்பு வராது" என்று சொன்னால் "நான் படித்து சாதிப்பேன்" என்று சொல்ல, "நீ சிகப்பில்லை" என்றால் "என் பலம் நிறத்தில் இல்லை" என்று சொல்ல, "உன்னால் முடியாது" என்று சொன்னால் "என்னால் முடியும்" என்று சொல்ல..... உள்ளே ஒரு உந்துசக்தி இருந்துகொண்டே இருக்கவேண்டும்.

உங்கள் நம்பிக்கைகளை குலைக்கும் செய்திகளை தொடர்ந்து கேட்டும் படித்தும் வந்தால் அதை நம்ப ஆரம்பித்துவிடுவீர்கள். அது உங்கள் வாழ்க்கையை சிறுமைப்படுத்திவிடும். அதனால், உங்களுக்கு உங்கள் மீதும், உங்கள் வாழ்க்கை மீதும், இந்த உலகின்மீதும் நம்பிக்கை தரும் செய்திகளை தொடர்ந்து செல்லுங்கள். அவை உங்களை வலுப்படுத்தும்.

நன்றி - குமுதம்

உலகின் சில மர்ம விமான விபத்துகள்

மர்ம விமான விபத்துகள்
239 பயணிகளுடன் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பற்றி இதுவரை எந்த தெளிவான தகவலும் கிடைக்கவில்லை. அரிதிலும், அரிதான இந்த சம்பவம் உறவினர்களையும், உலகத்தினரையும் பதைபதைப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நவீன யுகத்தில், தொழில்நுட்ப சவாலாக நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் விமானத் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சல்லடை போட்டு தேடியும் இதுவரை ஒரு துரும்பு கூட கையில் அகப்படவில்லை.

இந்த நிலையில், இத்தகைய அதிநவீன யுகத்திலும் ஏராளமான விமான விபத்துக்கள் நடந்துள்ளன. அதில், சில விமான விபத்துக்களுக்கான காரணங்கள் இதுவரை முழுமையாக கண்டறியப்படாமலும், மாயமான விமானங்களில் இருக்கும் மர்ம முடிச்சுகளும் இதுவரை அவிழ்க்கப்படாமலேயே உள்ளன. அதுபோன்ற, மாயங்களும், மர்மங்களும் நிறைந்த சில விமான விபத்துக்கள் சில.....

2009: ஏர் பிரான்ஸ் ஃப்ளைட் 447

2009ம் ஆண்டு மே 31ந் தேதி ரியோ டி ஜெனிரோ நகரிலிருந்து பாரீஸ் நோக்கி புறப்பட்ட ஏர்பஸ் ஏ330 விமானம் சில மணி நேரத்தில் கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பை இழந்தது. விமானம் விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்பட்ட பகுதியில் மிகப்பெரிய அளவிலான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எந்தப்பயனும் இல்லை. இந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் தாண்டி, 2012ம் ஆண்டில், அந்த விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் பயணித்த 228 பேரும் இறந்துவிட்டனர். ஆட்டோபைலட் சிஸ்டம் செயல் இழந்ததால், விமானம் கடலுக்குள் பாய்ந்து விபத்து நிகழ்ந்ததாக விசாரணை மேற்கொண்ட பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2003: போயிங் 727

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு விமானம் மாயமான சம்பவத்திலும் இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை. 2003ம் ஆண்டு அங்கோலா தலைநகர் லுகாண்டாவில் நிறுத்தப்பட்டிருந்த போயிங் 727 விமானம் திருடிச் செல்லப்பட்டது. குவாட்ரோ டி ஃபெவரெய்ரோ விமான நிலையத்திலிருந்து புர்கினா ஃபாஸோவுக்கு புறப்பட்ட போயிங் 727 விமானம் அதன்பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை. அமெரிக்க உளவுத் துறை உலக அளவில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையும் தோல்வியில் முடிந்தது. இந்த நாள் வரை இந்த விமானத்தை பற்றி ஒரு தகவலும் தெரியவில்லை. அதில், விமான பொறியாளர் உள்பட 3 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

1999 எகிப்து ஏர் ஃப்ளைட் 990

மர்ம விமான விபத்துகள்கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கெய்ரோவிலிருந்து நியூயார்க் புறப்பட்டு சென்ற எகிப்து ஏர் ஃப்ளைட் 990 விமானம் அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்து நொறுங்கியது. 14,000 உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென வெறும் 36 வினாடிகளில் கடலுக்குள் பாய்ந்து விபத்தில் சிக்கியது. இது விமான பொறியாளர்களுக்கு கடும் சவாலான விஷயமாக பட்டது. முடிவில், விமானி அல்லது துணை விமானி தற்கொலையால் விமானம் கடலுக்குள் செலுத்தப்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது தொழில்நுட்பக் கோளாறு என எகிப்து அறிவித்தது. இதுவரை இன்ன காரணத்தால்தான் விமானம் விபத்தில் சிக்கியது என்பதை யாரும் திட்டவட்டமாக தெரிவிக்கவில்லை. உலகின் பயங்கர விமான விபத்துக்களில் ஒன்றாக குறிப்பிடப்படும் இதில், 217 பேர் உயிரிழந்தனர்.

1996 டிடபிள்யூஏ ஃப்ளைட் 800

230 பயணிகளுடன் நியூயார்க் நகரிலிருந்து பாரீஸ் நோக்கி புறப்பட்ட போயிங் 747 விமானம் சிறிது நேரத்தில் நடுவானில் வெடித்து சிதறியது. ஏவுகணை மூலம் இந்த விமானத்தை தீவிரவாதிகள் தகர்த்திருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுந்தன. ஆனால், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையம் அறிவிக்கையில், இந்த விமானம் மின்கசிவு காரணமாக நடந்ததாக அறிவித்தது. இந்த விபத்திலும் உண்மையான காரணங்கள் வெளியிடப்பவில்லை என்று விமானத் துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

1988 'பான்- ஆம்' விமானம்

1988ம் ஆண்டு அமெரிக்காவின் முன்னணி விமான நிறுவனமான பாம்- ஆம் நிறுவனத்தின் பிராஃங்பர்ட்டிலிருந்து லண்டன் வழியாக நியூயார்க் செல்லும் விமானம் நடுவானில் தகர்க்கப்பட்டது. இந்த விமானத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அமெரிக்கப் பிரிவு தலைவர் ஜேம்ஸ் ஃபுல்லர் மற்றும் பல முக்கிய விவிஐபிகள் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்டு ஸ்காட்லாந்து மேலே 31,000 அடி உயரத்தில் பறந்தபோது வெடுகுண்டுகள் வைத்து தகர்க்கப்பட்டது. இந்த விபத்தில் 259 பேர் உயிரிழந்தனர். இந்த விமானத்தை லிபிய உளவுத் துறை திட்டமிட்டு தகர்த்தகாக கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இந்த விமானத்தை ஈரான் உளவுத்துறைதான் தகர்த்ததாக புதிய தகவல்கள் கூறுகின்றன. மர்ம முடிச்சுகள் அவிழாத விமான விபத்துக்களில் இதுவும் ஒன்று.

டைட்டானிக்: சில சுவாரசியங்கள்

டைட்டானிக் கப்பல்
கடல் ராணி என்றழைக்கப்பட்ட டைட்டானிக் கப்பல் 3,547 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது. முதல் பயணத்திலேயே விபத்தை சந்தித்த அந்த கப்பலில் பணியாளர்கள், பயணிகள் உள்பட மொத்தம் 2,223 பேர் பயணித்தனர். உயிர்காக்கும் படகுகள் மூலம் 706 பேர் வரை மட்டுமே உயிர் தப்பினர். மீதமுள்ள 1,517 பேர் கடல் மூழ்கி பலியாகினர். கடல் நீரின் வெப்பநிலை மைனஸ் 2 டிகிரிக்கும் குறைவாக இருந்ததே பலர் உயிரிழக்க காரணமாக கூறப்படுகிறது.

டைட்டானிக் கப்பலில்தான் முதன்முறையாக தொலைபேசி வசதியுடன், மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

டைட்டானிக் கப்பலின் நீராவி எஞ்சின்களை இயக்குவதற்கு ஒரு நாளைக்கு 800 டன் நிலக்கரி தேவைப்பட்டது.

புகைப்போக்கி குழாயின் உயரத்தை சேர்த்து அளவிடும்போது டைட்டானிக் கப்பல் 17 அடுக்குகள் கொண்ட கட்டிடத்திற்கு இணையாக இருந்தது.

மூன்று கால்பந்து மைதானத்திற்கு இணையான நீளத்தை கொண்டது டைட்டானிக்.

மணிக்கு 43 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. விபத்துக்குள்ளானபோதும், அதிகபட்ச வேகத்தில் சென்றதாலேயே பனிப்பாறைகள் இருப்பது தெரிந்தும் கப்பலை நிறுத்த இயலவில்லை என்று கூறப்படுகிறது.

டைட்டானிக் கப்பல்
டைட்டானிக் கப்பலில் நான்கு லிஃப்ட்டுகள், தண்ணீரை வெப்பமூட்டும் வசதி கொண்ட நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம், இரண்டு நூலகங்கள் மற்றும் இரண்டு முடிதிருத்தும் நிலையங்கள் இருந்தன.

நாள் ஒன்றுக்கு பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு 53,000 லிட்டர் குடிநீர் தேவைப்பட்டது.

டைட்டானிக் கப்பலில் நான்கு புகைப்போக்கி குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதில் மூன்று மட்டுமே புகை வெளியேற்றுவதற்கானது. மீதமுள்ள ஒன்று அழகுக்காக பொருத்தப்பட்ட போலி புகைப்போக்கி குழாய்.

டைட்டானிக் கப்பலில் மூன்று வகுப்புகள் கொண்டது. அதில், முதல் வகுப்பில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை இப்போதைய மதிப்புக்கு ஒப்பிட்டால் 99,000 டாலர்கள் ஆகும்.

நாள் ஒன்றுக்கு 86,000 பவுண்ட் இறைச்சி, 40,000 முட்டைகள், 40 டன் உருளைக் கிழங்கு, 7,000 முட்டைகோஸ்கள், 3,500 பவுண்ட் வெங்காயம், 36,000 ஆப்பிள்கள் மற்றும் 1,000 பிரெட் பாக்கெட்டுகள் ஆகியவை பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு உணவுப் பொருட்களாக தேவைப்பட்டது.

உலகில் மாற்றத்தை ஏற்படுத்திய கட்டடங்கள்

சைபீரிய குறுக்கு ரயில் பாதை - ரஷ்யா
The Trans-Siberian Railway - Russia
The Trans-Siberian Railway
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவையும் ஜப்பான் கடலை அண்டிய ரஷ்யாவின் கிழக்கு பகுதியையும் இணைக்கும் இதுதான் உலகின் மிக நீளமான ரயில் பாதை ஆகும். 1891இல் இருந்து 1916 வரையான காலப்பகுதியில் அமைக்கப்பட்ட இது 5,753 மைல்கள் (9,259 கி.மீ.) நீளமுடையது. இந்த ரயில் பாதையை தெரிவுசெய்து வரைவுகளை மேற்கொள்ள மட்டும் பத்து ஆண்டுகள் எடுக்கப்பட்டது. பெரும்பாலும் இராணுவத்தினரையும், குற்றவாளிகளையும் கொண்டு அமைக்கப்பட்ட இந்த ட்ரான்ஸ்-சைபீரியன் ரயில்பாதை இன்றுவரை ரஷ்யாவின் பொருளாதாரத்திலும், சைபீரியாவின் விவசாயத்திலும் முக்கிய ஆதிக்கம் செலுத்திவருகிறது.

பனாமா கால்வாய் - பனாமா
The Panama Canal - Panama
The Panama Canal
இது 48 மைல்கள் (77 கி.மீ.) நீளமுள்ள, பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களை இணைக்கின்ற செயற்கை கால்வாய் ஆகும். இது உலகில் ஆரம்பிக்கப்பட்ட மிக கடினமான கட்டுமான முயற்சிகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது. 1880இல் பிரான்ஸ் தலைமையில் கால்வாய் வெட்டும் பணி தொடங்கினாலும் இம்முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இதன்போது 22000 தொழிலாளர்கள் வரை பலியானார்கள். பின்னர் அமேரிக்கா தலைமையில் 1900களில் மீள ஆரம்பிக்கப்பட்டு, 1914இல் இக்கால்வாய் திறக்கப்பட்டது. மொத்தமாக 27500 தொழிலாளிகளை பலிகொண்ட பனாமா கால்வாய் திறக்கப்பட்ட பின்னர் கப்பல் பயணங்களில் 7872 மைல்கள் சேமிக்கப்படுகின்றன.

ஹூவர் அணை - அரிசோனா / நவாடா
Hoover Dam - Arizona/Nevada
Hoover Dam
இது அமெரிக்காவின் அரிசோனா, நவாடா மாநிலங்களுக்கிடையில், கொலராடோ ஆற்றுக்கு குறுக்காக, 1931-1936 இல் கட்டப்பட்ட கொன்க்ரீட் அணை ஆகும். இத்தகைய வறண்ட பிரதேசத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய ஒரு கொன்க்ரீட் கட்டமைப்பின் அற்புதமாக ஹூவர் அணை கருதப்படுகிறது. 221 மீற்றர்கள் உயரமும், 379 மீற்றர்கள் நீளமும் கொண்ட இவ்வணையின் அடிப்பகுதி 200 மீற்றர்கள் தடிப்பானது. Great Depression எனப்பட்ட மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை காணப்பட்ட இரண்டாம் உலகப்போர் நேரத்தில் கட்டப்பட்ட இந்த அணை, மிக அத்தியாவசிய குறிக்கோளுடன் கட்டப்பட்ட முக்கிய கட்டமைப்பாக கருத்தப்படுகிறது. 16000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த ஹூவர் அணையிலிருந்து கலிபோர்னியா, அரிசோனா, நவாடா ஆகிய மூன்று அமெரிக்க மாநிலங்கள் மின்சாரத்தை பெற்றுவருகின்றன.

புர்ஜ் கலிபா - டுபாய்
Burj Khalifa - Dubai
Burj Khalifa
உலகின் மிக உயரமான கட்டடம். கட்டடக்கலையில் புதிய எல்லைகளை நிர்ணயித்துவரும் டுபாய் தொட்ட உச்சம் இந்த புர்ஜ் கலிபா! ஆறு வருட கட்டுமானப் பணிகள், 1.5 பில்லியன் அமெரிக்கடாலர்கள் செலவு, 163 மாடிகள், 2717 அடிகள் உயரம் என உயர்ந்து நிற்கும் புர்ஜ் கலிபாவை வெல்ல இப்போதைக்கு யாரும் இல்லை என்றே சொல்லலாம். பெருகிவரும் சனத்தொகையால் ஏற்படும் இடப் பற்றாக்குறைக்கு ஒரு ஊரையே உள்ளடக்கக்கூடிய இத்தகைய பிரம்மாண்ட வானளாவிய கட்டடங்கள் முக்கிய எதிர்கால தீர்வுகளாக அமையும் எனலாம்.

கால்வாய் சுரங்கம் - பிரான்ஸ் / இங்கிலாந்து
The Channel Tunnel - France/England
The Channel Tunnel
இது இங்கிலாந்தையும் பிரான்சையும் இணைக்கின்ற, 50.5 கிலோமீற்றர்கள் நீளமான கடலடி சுரங்க வழிப்பாதை ஆகும். கடலுக்கு அடியில் 75 மீற்றர்கள் ஆழம்வரை ஊடுருவிச்செல்கின்ற இந்த சுரங்கமானது ஜப்பானின் செய்க்கான் சுரங்கத்துக்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது நீளமான சுரங்கவழிப்பாதையாக இருந்தாலும், கடலுக்கு அடியில் செல்லும் சுரங்க வழியை பார்க்கும்போது உலகின் நீளமான கடலடி சுரங்கப்பகுதியை கொண்டு காணப்படுகிறது. தூரத்தையும் நேரத்தையும் மிச்சமாக்கும் கடலடி சுரங்கவழி பாதைகளில் முன்னணியில் உள்ளது இந்த கால்வாய் சுரங்கம்.

கென்சாய் சர்வதேச விமானநிலையம் - ஜப்பான்
Kansai International Airport - Japan
Kansai International Airport
இது முற்றுமுழுதாக மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை தீவில் அமைக்கப்பட்ட முதல் விமான நிலையம் ஆகும். ஒசாகாவில் ஏற்கனவே இருந்த பழைய விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய இடவசதிகள் இல்லாத காரணத்தால் இந்த புதிய உத்தியை கையாண்டார்கள் கட்டுமான பொறியியலாளர்கள். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் உழைப்பில், 21 மில்லியன் சதுரமீட்டர்கள் மண்ணை கொட்டி உருவாக்கிய செயற்கை தீவில் அமைத்த இந்த விமான நிலையம்தான் நவீன உலக வரலாற்றில் மிக செலவு கூடிய கட்டுமானப்பணியாக உள்ளது. 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை விழுங்கிய இந்த கட்டமைப்பு பூகம்பம், சூறாவளி போன்றவற்றிலும் உறுதியாக இருப்பது கூடுதல் சிறப்பு.

பாம் தீவுகள் - டுபாய்
The Palm Islands - Dubai
The Palm Islands
பாம் தீவுகள் டுபாயில் உள்ள, தென்னை, பனை, பேரீச்சை போன்ற பாம் வகை மரங்களின் வடிவத்தில் உள்ள செயற்கை தீவுக்கூட்டங்களாகும். பாம் ஜுமேரா, பாம் ஜெபல் அலி, பாம் டெய்ரா என மூன்று பாம் தீவுகள் உள்ளன. டுபாய்க்கு மேலதிக கடற்கரையை தரும் இத்தீவுகளை டுபாயின் ஆழம் குறைந்த பாரசீக கடற்பரப்புகள் சாத்தியமாக்கி உள்ளன. மனிதனின் நவீன குடியேற்ற முறையின் ஒரு முக்கிய மைல்கல் இது என்பதில் சந்தேகமில்லை.




ஜியாசூ விரிகுடா பாலம் / குவிங்க்டோ ஹைவான் பாலம் - சீனா
Jiaozhou Bay Bridge / Qingdao Haiwan Bridge - China
Jiaozhou Bay Bridge / Qingdao Haiwan Bridge

சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள சன்டோங் மாநிலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம் ஜியாசூ விரிகுடாவினூடாக கிங்டோ நகரத்தை ஹுங்டோ மாவட்டத்துடனும் ஹோங்டோ தீவுடனும் இணைக்கிறது. 26.4 மைல்கள் நீளமான இது உலகின் மிக நீளமான நீருக்கு மேல் அமைக்கப்பட்ட போக்குவரத்து பாலமாகும். இப்பாலம் அமைக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட இரு நகரங்களுக்குமான பயணத்தூரம் 31 கிலோமீற்றர்கள் குறைந்ததுடன் பயண நேரம் 20 நிமிடங்கள் குறைந்தது. 450000 தொன்கள் இரும்பும், 2.3 மில்லியன் சதுர மீற்றர் கொன்க்ரீட்டும் கொண்டு கட்டப்பட்ட இந்த குவிங்க்டோ ஹைவான் பாலம் 8.0 ரிச்டர் அளவுள்ள நிலநடுக்கத்தையும், பெரும் சூறாவளிகளையும் தாங்கக்கூடியது. நேரத்தையும் தூரத்தையும் சேமிக்க மனிதன் உருவாக்கிய இன்னொரு பிரம்மாண்டம் இது.

- ரிஷிஷ்காந் -

கனவு - கணினி ஓவியம்

கனவு - கணினி ஓவியம் BY ரிஷிஷ்காந் 05/01/2014